'பிஎஸ்-4' வாகனங்கள் அவகாசம் நீட்டிப்பு

புதுடில்லி: உச்ச நீதிமன்றம், 'பிஎஸ்-4' வாகனங்களின் விற்பனைக்கு விதித்த, 'கெடு'வை நீட்டித்துள்ளது.

இந்தியாவில், தற்போது, வாகன மாசு அளவை குறிக்கும், 'பாரத் ஸ்டேஜ் - 4' எனப்படும், 'பிஎஸ்-4' தரக் குறியீடு உள்ள வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதை விட அதிக அளவில் மாசுவை கட்டுப்படுத்தும், 'பிஎஸ் - 6' தர குறியீட்டு நடைமுறை, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, வரும் ஏப்.,1ல் அமலுக்கு வருகிறது.



இந்நிலையில், வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், பொருளாதார மந்தநிலை, 'கொரோனா' பாதிப்பு போன்றவற்றால், அதிக அளவில் தேங்கிக் கிடக்கும், பிஎஸ் - 4 வாகனங்களின் விற்பனைக்கு விதித்த கெடுவை நீட்டிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக மனுவை விசாரித்த அமர்வு, டில்லி மற்றும் தலைநகர் பிராந்தியம் தவிர்த்து, நாடு முழுவதும், பிஎஸ்-4 வாகனங்களை, ஏப்.,10 வரை விற்பனை செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டது.